Saturday 17 November 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 20-10-2018-ல் முதலாம் ஆண்டுவிழா 12 ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (20-10-2018 அன்று முதலாம் ஆண்டுவிழா மற்றும் ஆண்டுவிழா மலர் வெளியீட்டு விழாவாக 12 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 20-10-2018 மாலை 5.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மற்றும் ஆண்டுவிழா மலர் வெளியீடும் மாதாந்திர நிகழ்ச்சி (12ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. திருமதி. துளசிமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த மாத சந்திப்பில், வழக்கத்திற்காக மாறாக சிறுவர்கள் மாறுவேடத்தில் வந்து அசத்தினர்.
ஜோஷிக்கா ஔவையார் வேடத்தில் வந்து 'நான்கு கோடி பாடல்' என்ற தலைப்பில் வரும் பாடலைப் பாடி பொருளும் கூறினார். "உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்" என்ற தலைப்பில் வந்த வைரமுத்து அவர்களின் கவிதையை தக்க ஏற்ற இறக்கத்துடன் வழங்கிச் சென்றார் கவின்நிலா. தமிழே வாழ்க என்ற மொழி வாழ்த்தினையும் 147 ஆவது பாடலாக  பாலை திணையில் வரும் "ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த" எனத் தொடங்கும் செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது தலைப்பில் வந்த அகநானூறு பாடலையும் தம் மழலை மொழியால் பாடிச் சென்றார் ஸ்ரீயா.
அடுத்து வந்த சிறப்பு அங்கத்தில், கன்னத்தில் பொத்தி வைப்பேன்... ராதை மனதில்... காக்கை இல்ல சீமையில.. என்ற பாடல்களோடு ஆடினர் நீக்கிதா, பிரவிதா மற்றும் ஜீவஜோதிகா.
தமிழ் மன்னன் அதியமான் பற்றி அழகுற சிறப்பாக பேசினார் நிதிஷ்ராஜ். கண்ணகி வேடத்தில் வழக்குரைக் காதையை தகுந்த உச்சரிப்புடன் வழங்கினார் லிதர்ஸா.

முதலாம் ஆண்டுவிழாவில் புறநானூறு பாடல்களுக்கு இலக்கிய நாடகங்களை அரங்கேற்றியது சிறப்பாகும். வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறுவர் நாடகம் முதல் குழுவில் இணைந்தவர்கள் ஜீவஜோதிகா, சம்ரிதா, பிரித்தீவ் மற்றும் அதர்வா. "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே" என்ற புறநானூறு பாடலுக்கான கருத்தோடு "மிஞ்சாதே !" என்ற தலைப்பில் நாடகம் அரங்கையே அதிர வைத்த முதல் நாடகத்தை அழகுற நடித்துச் சென்றனர்.

"அன்பு பத்தும் செய்யும்" என்ற தலைப்புடன் வந்த இரண்டாவது சிறுவர் நாடகக் குழுவினர் நந்திகா, அன்யா மற்றும் விமல், உலகை வெல்ல எளிய ஆயுதம் அன்பு ஒன்றே வழி என்ற கருந்துடன் "கடந்து அடு தானை மூவிரும் கூடி"  புறநானூறு பாடல் கபிலர் வேள் பாரி பற்றிய காட்சியில் நடித்து அனைவருடையப் பாராட்டையும் பெற்றனர்.

இவ்விரு நாடகங்களுக்கு இடையே தலைமையுரை வழங்கிய பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி முதலாம் ஆண்டுமலர் பற்றியும் கடந்த ஓராண்டு காலமாக செயலவை உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றியும் எடுத்துகூறி நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

முதன்முறையாக பெரியவர்கள் பங்கெடுக்கும் பரதநாட்டியம் ஆடினர் திருமதி பவித்ரா மற்றும் திருமதி தேவிபாலா இருவரும் "தமிழே உயிரே வணக்கம்" என்ற பாடலுக்கு அழகுற அபிநயம் பிடித்தனர்.

தொடர்ந்து வந்த பெரியவர் நடனக் குழுவினர், தித் திமி... சொய் சொய்... தோட்டுக்கடை ஓரத்தில.... ஆகிய பாடல்கள் இணைந்த நாட்டுபுற நடனம் வழங்கி அசத்தினர் திருமதி தீபிகா, திருமதி வினோதினி, திருமதி உஷா மற்றும் திருமதி சவிதா

"தமிழ் இலக்கிய வரலாறு" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள். கவிஞர் முத்து.இராஜசேகரன் அவர்கள் வாழ்த்துப்பா வழங்கி மகிழ்ந்தார்.

முதலாமாண்டு ஆண்டுவிழாவின் சிறப்பு அம்சமாக இந்த மாத நிகழ்ச்சியில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வாழ்வியல் இலக்கியப் பொழில் அங்கத்தினர் நடத்திய  பட்டிமன்றத்தில் அழகுற பேசினர் இலக்கியக் குடும்ப அங்கத்தினர். பட்டிமன்ற நடுவராக வந்தார் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி. நல்வாழ்விற்கு மிகவும் உகந்தது ஏட்டறிவே! பட்டறிவே! என்ற தலைப்பில் ஒரு அணிக்கு நால்வர் களமிறங்கினர்.
ஏட்டறிவே என்ற அணியில் திருமதி பவித்ரா, திருமதி சங்கரி, திருமதி அன்னபூரணி மற்றும் திருமதி வினோதினி. பட்டறிவே என்ற அணியில் திருமதி தீபிகா, திருமதி உஷா, திருமதி மஞ்சுளா மற்றும் ஆசிரியை கலைவாணி வளமான கருத்துகளுடனும், கலகலப்பாகவும் பேசி தமது வாதங்களை நல்ல உச்சரிப்புடனும் உணர்வுடனும் பேசி அரங்கை அதிர வைத்தனர். தொடக்கவுரை முதல் முடிவுரை வரை இடையிடையே தக்க கேள்வி பதில்களுடன் பட்டிமன்றத்தை வழிநடத்திச் சென்றார் நடுவர்.

ஆண்டுவிழாவின் முக்கிய அங்கமாக "வாழ்வியல் இலக்கியப் பொழில் முதலாம் ஆண்டுவிழா மலர்" வெளியீடு கண்டது. முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் மலரை வெளியிட தமிழகத்தைச் சார்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. இராஜேந்திரன் அவர்கள் முதல் பிரதியைப் பெற விழாக் கோலமாக மாறியது அரங்கம்.

கடந்த ஓராண்டாக வாழ்வியல் இலக்கியப் பொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்ற செயலவைக்குழு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்களுக்கு நினைவுப்பரிசினையும் ஆண்டுமலரையும் வழங்கி தம்முடைய நன்றியைத் தெரிவித்துகொண்டார் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  

இசையிடையே, சிங்கப்பூர் தமிழ் முன்னோடிகள் சிலருடைய வாழ்க்கை வரலாற்றினை வழங்கி அதி குறிப்பாக தமிழவேள் கோ.சாரங்கபாணி,சி .சுப்பையா; திரு நா.வீராசாமி நாயுடு, திரு கு, வேலுப்பிள்ளை பக்கிரிச் சாமி பிள்ளை ஆகியோரை ந்ன்றியோடு நினைவு கூறி, நிகழ்ச்சியை அழகுற நெறிபடுத்தி சென்றனர் திரு கலியபெருமாள் மற்றும் திரு கார்த்திக் இருவரும். நன்றியுரை வழங்கிய திருமதி கோமதி மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். தமிழில் பிறந்தாள் பாடல் ஒளியேற கார்த்தி மற்றும் கிருஷவ் ஆகியோரின் பிறந்தநாள் விழாவும் அரங்கேறியது சிறப்பாகும்.

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  12 ஆவது சந்திப்பு 20-10-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !

மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்



No comments:

Post a Comment